இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
ஆசிரியர் தினம், முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு மற்றும் ‘HCAS Influencer’ பாடத்திட்டம் அறிமுகம்
சென்னை: சென்னை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (HCAS) வளாகத்தில் ஆசிரியர் தின விழா, 2026-ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா மற்றும் ‘HCAS Influencer’ புதிய பாடத்திட்டம் அறிமுகம் என முப்பெரும் விழா ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது.
ஆசிரியர் தின விழா காலை 10 மணியளவில் கல்லூரியின் எம்.ஜி.ஆர். அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு HCAS இயக்குநர் டாக்டர் சூசன் வர்கீஸ் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் உயர்கல்வித் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், HCAS-ன் 30 ஆண்டுகால பயணத்தை பதிவு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மேலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விப் பணியை பாராட்டும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா (Freshers’ Day) நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் HCAS துணை இயக்குநர் டேவிட் ரயன் வரவேற்புரையாற்றினார்.
‘HCAS Influencer’ புதிய பாடத்திட்டம்
விழாவின் ஒரு பகுதியாக ‘HCAS Influencer’ என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் படைப்பாற்றல், தகவல் தொடர்புத் திறன் மற்றும் டிஜிட்டல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் கல்லூரி மற்றும் சமூகத்துடன் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும், கல்லூரியின் வளாகச் செயல்பாடுகளை வெளிப்படுத்தவும் தேவையான திறன்களை வளர்ப்பது இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரித்தல், புதிய மாணவர்களை வரவேற்றல் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்களுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த முப்பெரும் விழா அமைந்தது.
