மீடியா துறையினருக்கு விருது: பெங்களூரில் அக்டோபர் 23-ல் பிரமாண்ட விழா
சென்னை: மீடியா துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்கள், தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரை கவுரவிக்கும் வகையில், தி நியூ இன்டியன் டைம்ஸ் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது விழா அக்டோபர் 23-ம் தேதி பெங்களூரு பேலஸ் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளைச் சேர்ந்த மீடியா துறையினருக்கு 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தி நியூ இன்டியன் டைம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரகுபட், நடிகர் தலைவாசல் விஜய், ஏ.யூ. ஓடிடி நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழா குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
இந்த ஆண்டு முதல் பிரிண்டிங் மீடியா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னணி பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். தமிழுக்கான விருது கமிட்டி நடுவராக மூத்த பத்திரிகையாளர் மீனாட்சிசுந்தரம் செயல்படுகிறார்.
