எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா
15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் சார்பில் பொங்கல் விழா மாபெரும் விழாவாக திங்கட்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிறுவன வேந்தரும் தமிழ்ப்பேராயப் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் வழிகாட்டுதலின்படி கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

காலை 9 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திலிருந்து தொடங்கிய கலைப்பேரணியில் நாதஸ்வரம், பறையிசை, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சுமார் 2,000 பேர் பங்கேற்ற பேரணி, பொங்கல் விழா நடைபெற்ற விளையாட்டுத் திடலை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து மாணவ – மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் பத்மபிரியா ரவி மற்றும் மணிமங்கை சத்தியநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய டாக்டர் தா. இரா. பாரிவேந்தர், விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்ப்பேராயத்தை பாராட்டினார். இத்தகைய விழாக்கள் மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, தமிழர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை அறிய உதவுவதாகவும், ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கும் விழாவாகவும் அமைவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் துணைவேந்தர், இணைத் துணைவேந்தர், பதிவாளர், தமிழ்ப்பேராயத் தலைவர், வளாக நிர்வாகிகள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
